dailyvideo


பால் உற்பத்தி குறித்து அல்-குர்ஆன்



உயிரினங்களின் இரத்த ஓட்டம் பற்றிய அறிவியலை இப்னு நஃபீஸ் என்பவரே முதன்முதலாக கண்டறிந்து கூறினார். இது நடந்தது குர்ஆன் இறக்கியருளப்பட்ட 600 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆகும். இவருக்கு 400 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த வில்லியம் ஹார்வி என்பவர் இரத்த ஓட்டம் பற்றிய இந்த அறிவியலை மேலை நாடுகளுக்கும், உலக நாடுகளுக்கும் எடுத்துக்கூறி இதை பிரபல்யப்படுத்தினார். உணவு உட்கொள்ளப்பட்டவுடன், அது இரைப்பைக்கு (Stomach) சென்று பின்னர் குடல்களுக்குச் செல்கிறது. இவற்றில் நாம் உட்கொண்ட உணவுகளின் சத்துக்கள் உறிஞ்சப்பட்டு, சக்கைகள் வேறாகவும், சத்துப்பொருட்கள் வேறாகவும் பிரிக்கப்படுகின்றது. இந்த சத்துப்பொருட்கள் குடல்களிலுள்ள இரத்த நாளங்களின் (Blood Vessels of Intestine) வழியாக இரத்த ஓட்டத்தைச் (Blood Circulation) சென்றடைகிறது. இந்த இரத்த ஓட்டம் நாம் உண்ட உணவின் சத்துப் பொருட்களை உடலின் பல்வேறு பாகங்களுக்கும் எடுத்துச் சென்று அந்த உறுப்புகள் சீராக இயங்குவதற்கு உதவுகிறது. இவ்வாறு குடல்களுக்குச் சென்ற உணவு பொருட்களின் சத்துக்கள் குடல்களின் இரத்த நாளங்கள் மற்றும் இரத்த ஓட்டங்களின் வழியாக பால் சுரப்பிக்கும் (Mammary Gland) சென்று அவைகள் பால் சுரப்பதற்கு ஏற்ற சக்தியை அளிக்கின்றது. 


இது இன்றைய தினம் நாம் பெற்றிருக்கும் ‘பால் எங்கிருந்து எப்படி சுரக்கிறது’ என்பதைப் பற்றிய அறிவியலாகும். இந்த நவீன விஞ்ஞான அறிவை 1430 ஆண்டுகளுக்கு முன்னரே அல்லாஹ்வின் அருள்மறை கூறியிருக்கிறது என்றால் அது ஆச்சரியமளிப்பதாக இருக்காதா? ஆம் இது விஞ்ஞானிகளுக்கு பேராச்சரியமாகத் தான் இருக்கிறது. இந்தப் பேருண்மையை சத்திய திருமறை ஸூரத்துல் நஹ்ல்-ன் 66-வது வசனத்தில் கூறுகிறது.

நிச்சயமாக (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளிலும் (தக்க) படிப்பினை இருக்கின்றது. அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும் இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு இனிமையானதாக (தாராளமாகப்) புகட்டுகிறோம்” (அல்குர்ஆன்: 16:66)


“நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) பிராணிகளில் ஒரு படிப்பினை இருக்கிறது. அவற்றின் வயிறுகளிலிருந்து (சுரக்கும் பாலை) நாம் உங்களுக்குப் புகட்டுகிறோம். இன்னும் அவற்றில் உங்களுக்கு அநேக பயன்கள் இருக்கிறது. அவற்றி(ன் மாமிசத்தி)லிருந்து நீங்கள் புசிக்கின்றீர்கள்” (அல்குர்ஆன்: 23:21)


வயிற்றில் உள்ளவற்றுக்கும் (சத்துக்கள் உறிஞ்சி எடுக்கப்பட்ட உணவு பொருட்களுக்கும்) இரத்தத்திற்கும் இடையிலிருந்து பால் உற்பத்தியாகின்றது என்று நவீன விஞ்ஞானம் கூறும் உண்மைகளை 1430 ஆண்டுகளுக்கு முன்னரே எடுத்தியம்பிய திருமறை வசனங்களை பார்க்கும்போது, இது மனிதர்களின் வார்த்தைகளல்ல, நிச்சயமாக இது அனைத்து உயிரினங்களையும் படைத்து பரிபக்குவப்படுத்திய இறைவனின் வார்த்தைகள்தான் என்பதில் கடுகளவும் சந்தேகமில்லை.


அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள். வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து, 'எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை. நீ மகா தூய்மையானவன். (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!'(என்றும் கூறுவர்)(திருக்குர்ஆன்3:191) 


நிச்சயமாக எவர்கள் 'எங்கள் இறைவன் அல்லாஹ்வே' என்று கூறி, பிறகு அதிலேயே நிலைத்து நிற்கிறார்களோ அவர்களுக்கு பயமில்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (திருக்குர்ஆன்46:13)

Recent Entries

Recent Comments

Photo Gallery

designer by MOHAMED ALAUDEEN 9789070505